Saturday, July 18, 2015

மாதொருபாகன் எனது பார்வையில்

மாதொருபாகன்  விடுதலைக்கு  முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையில்லா கணவன் -மனைவி கதை. நான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தை சேர்ந்தவன் என்பதால் இதில் பயன்படுத்தபட்டுள்ள  செய்திகளும், சொல்லாடல்களும் எளிமையாக இருந்தது . அநேகமாக நான் படித்த புதினங்களில் மிக வேகமாக படித்தது இதுவாகத்தான் இருக்கும். நான் ரசித்த சில வழக்குச்  சொற்கள் ; பயா -பையன் /மகன் , உதுட்டு -நீக்கிவிட்டு , ச்சுடேய் -நாயை விரட்ட , பொட்டுக் கூடை -சின்ன கூடை. இந்த புதினத்தில் குழந்தையின்மையே கரு. திருச்செங்கோட்டு மலையை சுற்றி உள்ள இரண்டு  ஊரில் நடக்கும் கதை திருச்செங்கோடு திருவிழாவில் முடிவடைகிறது.

காதல், பாசம் அனைத்தையும் மீறி  குழந்தையின்மை கதைத்  தலைவன் தலைவி இல்வாழ்க்கையை சோகம் நிறைந்தாகுகிறது . தலைவிக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தமும், அதனால் உண்டாகும் வலியும், அந்த வலியால் உண்டாகும்   நிகழ்வுகளுமே கதையை நகர்த்தி செல்கின்றன. சாதி பிரிவினைகளை அந்ததந்த சாதிகளின்  வாழ்கை முறைகளையும் , அடுத்த சாதியுடன் கூடிய உறவையும் கொண்டு உணர்த்திய விதம் அருமை.

திருச்செங்கோட்டு மலையில்  செங்கோட்டையன் ,அர்த்தனரீஸ்வரருக்கு  இணையாக  காட்டுக்குள்  பவாத்தா கோயிலை பற்றி வரும் பகுதி அருமை. நெய்வேதியும் படைக்கப்படும் கடவுளும், கோழி படைக்கப்படும் கடவுளும் ஒருங்கே இருக்கும் செய்தி எனக்கு ஆச்சரியம். அடுத்து திருச்செங்கோட்டு மலைமீது இருக்கும் வரடிகல். குழந்தையில்லா பெண்கள் இதை சுற்றினால் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனது அம்மாவின் ஆயா இதை சுற்றியதாக வீட்டில் கூற கேள்வி பட்டுள்ளேன். கரணம் தப்பினால் மரணம் என்பது இந்த கல்லை சுற்றுவதற்கு பொருந்தும். இந்த கல்லை கதை தலைவி பொன்னா சுற்றுவாள். இந்த ஒரு காட்சி விவரிப்பு குழந்தை இல்லா பெண் பட்ட பாட்டை விளக்கும்.

கதையில் வரும் தொண்டுபட்டியும், அதன்  பயன்பாட்டு விவரிப்பும் அருமை. ஆங்கிலேயனின்  நரித்தனம் நல்ல விவரிப்பு. பூவரச மர உவமை அழகு.சமூகம், குடும்பத்தில் இருந்து விலகி நிற்கும் நல்லுபையன் சித்தப்பாவும், அவரது முரணும் அருமை  . தனி ஒருவராக விவசாயம் செய்து மகனை வளர்க்கும் மாராயி பாத்திரம் நடைமுறை  வாழ்க்கையில் நான் பார்த்த ஒன்று.

 கதை இறுதியில் தலைவி மற்றொருவன் மூலம் குழந்தை பெற்று கொள்ள எடுக்கும்  முடிவும், அது திருச்செங்கோட்டு திருவிழாவின்  பதினைந்தாம் நாளில் நடக்கும் ஒரு வழக்கத்தின் மூலம் நடப்பதுவுமே சர்ச்சைக்கு  காரணம். இதில் தலைவியின்  முடிவு அவளால் எடுக்கப்பட்டது என்பதை விட சுற்றத்தால் தள்ளப்பட்ட ஒன்று என்றே கூற வேண்டும். அது கடவுள் நம்பிக்கையுடன் தொடர்படுத்தி இருப்பது ஆய்வில் ஆழம் மற்றும் ஆசிரியரின் ஆளுமை பொருத்தது. ஏனென்றால் இது பத்து-இருபது வருடங்களுக்கு முன் நடந்தது அல்ல , நூறு வருடங்களுக்கு முன் நடக்கும் கதை. ஆய்வு செய்து எழுத ஆசிரியர்க்கு எவ்வளவு உரிமை உண்டோ அதனை ஆய்வுக்கு உட்படுத்தி எதிர்துரைக்க உரிமை எவருக்கும்  உண்டு. ஆனால் கடைசி நான்கு பக்கத்தை படித்துவிட்டு கூச்சல்  இட்டு மிரட்டுவது குறை குடம்  கூத்தாடுவதற்க்கு சமம்.

 ஆழி சூழ் உலகில் இதை காட்டிலும் தனி மனித ஒழுங்கீனங்கள் எழுத பட்டிருக்கும். அது கடல் வாழ் மக்களின் வாழ்கை.அதை எழுதிய ஜொ.டி.குருஸ், அவரது இன்னொரு நாவலுக்கு சாகித்திய அகாடமி  விருது பெற்றார். ஆக எந்த நாடும், இனமும், சமூகமும் ஒரே பழக்க வழக்கத்தை  தலைமுறை தலைமுறையாக பின்பற்றியதில்லை. எல்லாம் சிறு முதல் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது.

எனவே எனது பார்வையில் இது நூறு வருடங்களுக்கு முன் இருந்த பண்பாட்டில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை. சரி அல்லது தவறு என்றுரைக்க நான் வரலாற்று  ஆசிரியனோ மொழியியல் வள்ளுனுனோ அல்ல. இதற்க்கு எதிர் கருத்துள்ள புதினத்தை யாரேனும் எழுதினால் அதையும் படிக்க தயார்.