Saturday, July 11, 2020

KORKAI NOVEL




   உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நாகரிங்கள் தோன்றியும் மறைந்தும் உள்ளன. உழவுத் தொழில், மனித நாகரிகத்தின் அடிப்படை. நிலப்  பகுதிகளில் உழவும் அது  சார்ந்த தொழில்களில்களுமே மக்களின் வாழ்க்கைப்பாடு. இந்த பகுதிகளில் புது நாகரிக அறிமுகங்களும் அதனால் ஏற்படும் பழக்கவழக்க மாறுபாடுகளும் 1800கள்  வரை மிக மிக குறைவு.

  தமிழர்கள் நெடுங்காலம் தொட்டே கடல் சார்ந்து இயங்கி வந்துள்ளார்கள். கடற்கறைகளிலேயே நாகரிகங்கள் சந்தித்து கொண்டன.

  சேலம்  மாவட்டத்தில் பிறந்து, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு , பெங்களூரு , டாக்கா , கோவை போன்ற ஊர்களில் வாழ்ந்ததால், கடலை பார்ப்பதே அரிதான ஒன்றாகி போனது. அதனால் கடலையும், கடலோடிகளின் வாழ்வையும் , அவர்களின் வரலாற்றையும் புரிந்து கொள்ள ஒரு  ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது.


   அந்த தேடலில் கிடைத்த எழுத்தாளர் ஜோ.டி.குருஸ். அவர் எழுதிய இரண்டு  நாவல்கள் 'ஆழி சூழ் உலகு' மற்றும் 'கொற்கை'. ஆழி சூழ் உலகு, மீன் பிடி தொழிலையும்,அதன் லாவகங்களையும், பரதவர்களின் வாழ்வியலையும், சமயங்களையும், போர்த்துகீசிய படையெடுப்புகளையும் பற்றி மிகவும் விளக்கமாக கூறும் நாவல்.

  அடுத்ததாக 'கொற்கை', இது 1914 தொட்டு 2000 ஆம் ஆண்டு வரையிலான கடற்கரை வாழ்க்கையையும், மாற்றங்களையும் அந்தந்த காலகட்டங்களில் நடந்த உண்மை நிகழ்வுகளை  கொண்டு எழுதியுள்ளார். இதில் 38 குடும்பங்களும், 150க்கு அதிகமான பாத்திரங்களும், 5 தலைமுறை வாழ்வுமே இந்த நாவல்.

  கொற்கை  நகரமே முக்கிய  கதை களம். பேச்சு வழக்கு தமிழில் உள்ளதால் அந்த பகுதி மக்களாக இல்லாதிருப்பின் வேகமாக படிப்பது சற்று கடினம்.

  1914ல்  கொற்கை ஒரு துறைமுகமாக துவங்கியதில் ஆரம்பிக்கிறது. பரதவர்கள்  மற்றும் நாடார்கள்  என இரண்டு சமுதாய மக்களின் வாழ்வையும்   தாழ்வையும் எந்த விதமான ஒப்பனைகளும் இன்றி சொல்கிறார் ஜோ.டி.குருஸ். தான் ஒரு பரதவர் என்பதால் கடற்கரை வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார்.

  1128 பக்க நாவலை பற்றி முழுமையாக கூற இயலாது. எனினும் என்னை கவர்ந்த. பாதித்த, வியந்த செய்திகளை சொல்வதானால் இனி படிப்பவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும்.

  நெடுங்காலம் தொட்டு மீன்பிடி, முத்து குளித்தல் என்று இருந்த பரதவர்களின் தொழில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் கடல் வாணிகம்,ஏற்றுமதி/இறக்குமதி என அது சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கிறது.

  பரதவ மன்னரான பாண்டியபதி ஆளுகையின்  அந்திம காலம்  இயல்பாக கூறப்பட்டுள்ளது. பிரான்சிஸ், கடைசி வாரிசு முடிசூட்டிக்கொள்ளாமல், வங்கி வேலையில்  இருந்து கொண்டு, கூலிக்கு மீன் பிடிக்கும் தொழிலாளர்களின் உரிமைக்காக உழைப்பவராக காட்டப்பட்டுள்ளார்.

  வல்லம் கட்டும் விதமும் , அதன் பகுதிகளும் விலாவரியாக கதையோடு விளக்கப்பட்டுள்ளது.

  ஆங்கிலேயர்கள் நூல் ஆலைகளை இயக்க ஆரம்பித்த பின், கொற்கை நகர் இரண்டு முக்கிய பொருட்களை கையாளுகின்றன 1. நிலக்கரி 2. பஞ்சு. இதற்காக கொற்கையில் சரக்கு ரயில் வசதியும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆலைகளுக்கான இயந்திரங்கள் கப்பல்கள் மூலமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

  கொற்கை துறைமுகம் ஆழம் இல்லாததால் நடுக்கடலிலேயே சரக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரக்குகளை மாற்ற தோணிகள் இயக்க்கப்பட்டு  வந்துள்ளன. தோணிகளை விட பெரிய வல்லங்களை கொண்டு சரக்குகள் கொழும்பு, கொச்சி, மும்பை, குஜராத் ஆகிய துறைமுகங்களுக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளன.

  இதில் கொற்கை-கொழும்பு நடை மிக அதிகமாக நடைபெற்றுள்ளது. கொழும்பு துறைமுகம் ஆழம் அதிகம் ஆதலால் பன்னாட்டு சரக்கு மாற்றம் அங்கேயே நடந்துள்ளது.இன்றும் அதே நிலைதான்.

  பரதவர்களில் பணக்காரர்கள் மேசைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். 400 ஆண்டுகளாக போர்துகீசியர்களின் வருகை தொட்டு மாதாவை வழிபாடுபவர்களாக இருந்துள்ளனர், இன்றும் இருக்கின்றனர். இவர்களில் முக்கிய குடும்பங்களாக பெர்னாண்டோ,கார்டோஸா,ரிப்பேரா, பல்டோனா குடும்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களின் கடல் வணிகத்தில் இவர்கள் பங்கு அதிகமாக இருந்துள்ளது. இலங்கை விடுதலை வரை கொழும்பு துறைமுகம் இவர்கள் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளது.

  யாழ்ப்பாண தமிழர்கள் - இந்திய தமிழர்கள் -சிங்களவர்களுக்கு  இடையேயான உறவு, அரசியல் நாவல் முழுக்க சொல்லப்பட்டு இருக்கிறது. மலையக தமிழர்களை நாட்டை விட்டு வெளியே அனுப்புவதில் சிங்கள அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு இருக்கிறது. இது போன்ற செய்திகள் வலிந்து தினியாமல் இயல்பாக கதையோடு இழையப்பட்டு இருக்கிறது.

  அரவிந்தன் நீலகண்டன் முன்னுரை எழுதியிருப்பதும் ஆசிரியர் ஹிந்தி ,ஜோசியம் போன்றவற்றை தூக்கி பிடித்திருப்பதும் இயல்பானதாக தெரியவில்லை.

  'ஆழி சூழ் உலகு ' கொற்கையை காட்டிலும் இயல்பானதாகவும் உயிரோட்டமாகவும் இருந்தது. எனினும் 100 ஆண்டுகால கதையை தொய்வின்றி படிக்க ஏதுவாக எழுதியிருப்பதும், பெரும்பான்மை அறிந்திராத கடல் வாழ்வியலை வரலாற்று நிகழ்வுகளோடு கூறியிருப்பதும் இந்த நாவலை நிச்சயம் படிக்க வேண்டும் என்பதற்கான எனது காரணங்கள்.


                                                                  நன்றி !  

No comments:

Post a Comment